ஜார்ஜ் டவுன், அக்டோபர் 25 :
15வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் கெராக்கான் கட்சி வேட்பாளர்கள் பெரிகாத்தான் நேஷனல் (PN) சின்னத்தைப் பயன்படுத்துவார்கள் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் மத்திய கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் இன்று பயான் பாரு தொகுதியின் பெரிகாத்தான் நேஷனல் செயல்பாட்டு அறையைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பினாங்கில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில், ஜெலுடாங், பயான் பாரு, புக்கிட் பெண்டேரா, தஞ்சோங் மற்றும் பத்து கவான் ஆகிய தொகுதிகளில் தமது கட்சி PN சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட விரும்புவதாக லாவ் கூறினார்.
“நாங்கள் மற்ற மாநிலங்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம்,” என்று அவர் கூறினார், மேலும் இம்முறை கெராக்கனால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் 80 விழுக்காட்டினர் புதிய முகங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.