கிள்ளான், அக்டோபர் 31 :
KPJ கிள்ளான் மருத்துவமனையில் தீபாவளி கோலத்தை நாசம் செய்த நபரின் செயல் தொடர்பில் வைரலான TikTok வீடியோ தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (அக். 30) இரவு, வீடியோவில் காணப்பட்ட நபர் மற்றும் அதை பதிவு செய்த நபர் இருவரும் கைது செய்யப்பட்டு, அவ்விருவரும் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் எஸ். விஜய ராவ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியில், ஒரு ஆடவர் வேண்டுமென்றே கோலத்தின் மீது நடந்து சென்று அதை சேதப்படுத்துவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் பரவி, வலைத்தளவாசிகள் இடையே பெரும் அதிருப்தி மற்றும் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த காணொளிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து , காவல்துறை விசாரணை தொடங்கியது.
இதற்கிடையில் KPJ கிள்ளான் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “KPJ கிள்ளான் மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த அந்த காணொளியில், அதன் ஊழியர்கள் செய்யும் எந்த அவமரியாதைச் செயலையும் எமது நிர்வாகம் மன்னிக்காது. நாங்கள் உள்ளக விசாரணையைத் தொடங்கியுள்ளோம், இதில் எங்கள் ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அது தெரிவித்துள்ளது.