கோத்தா கினாபாலு, நவம்பர் 4 :
சபாவில் வெள்ள நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, அங்கு செயலில் இருந்த அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டுள்ளன, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) நண்பகல் 1 மணிக்கு பியூஃபோர்ட்டில் இயங்கிவந்த இறுதி நிவாரணமையமும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (அக் 30) முதல் செவ்வாய் (நவம்பர் 1) வரை பெய்த மழையின் காரணமாக சபாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களை தங்க வைப்பதற்காக திங்கள்கிழமை (அக் 31) முதல் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.