ஷா ஆலாம், நவம்பர் 10 :
கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியாவில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுமார் 200 வீடுகள் பாதிக்கப்பட்டன என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.
அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எட்டு வீடுகளைச் சேர்ந்த 30 பேர் செக்கோலா கெபாங்சான் ஜோஹான் செத்தியாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, நீர்மட்டம் இரண்டு அடிக்கு (0.6 மீட்டருக்கு) மேல் உயர்ந்திருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
வெள்ள மீட்பு நடவடிக்கையில் தீயணைப்புப் படையைத் தவிர, காவல்துறை, தன்னார்வ தீயணைப்பு வீரர்கள், சுகாதார அமைச்சகம், கிள்ளான் மாவட்ட அலுவலகம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவையும் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.