பெர்சத்து தகவல் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான், பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் தாமதமான வாக்குப்பதிவின் காரணமாக டிசம்பர் 7ஆம் தேதி கெடா மாநில அரசு சிறப்பு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். புதன் கிழமை அன்று கெடா மக்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் வகையில் இந்த முன்மொழிவு இருப்பதாக தாசேக் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இன்று கம்போங் படாங்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது புதன்கிழமை பெரும்பாலானோருக்கு வேலை நாள் என்றும் வாக்களிக்க வரும் மக்களின் சதவீதம் அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும் அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) பெரிகாத்தான் நேஷனல் (PN) சார்பில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் டத்தோ அஸ்மான் நஸ்ருதீனைச் சந்தித்தபோது, PN “அலை” உண்மையில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அளவிடும் அளவுகோலாக பாடாங் செராய் தேர்தல் இருக்கும் என்றார் .
நவம்பர் 19 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 14 நாடாளுமன்ற இடங்களில் 13 இடங்களில் கூட்டணி வெற்றி பெற்றது. முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் எம். கருப்பையா மரணமடைந்ததைத் தொடர்ந்து, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 3 ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும் டிசம்பர் 7 ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும் தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்தது.
இதற்கிடையில், தொகுதிக்கான பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் டத்தோ சி. சிவராஜ், கெடாவில் அதிக விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக டிசம்பர் 7 ஆம் தேதி விடுமுறையை அறிவிக்கும் முன்மொழிவை ஏற்றுக்கொண்டார்.