தென் கொரிய நாடகம் பார்த்த குற்றச்சாட்டில், 2 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வட கொரியா

சியோல், டிசம்பர் 7 :

வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது.

ஆனால் பக்கத்து நாடான தென்கொரியாவிற்கு வடகொரியாவில் நடக்கும் பல விஷயங்கள் உடனே தெரிந்துவிடும். அந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் தான் அங்கு நடப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் ‘வீடியோ, குறுந்தட்டுக்களை ‘ விற்பனை செய்வது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில், வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரிய தொலைக்காட்சி நாடகம் பார்த்த குற்றச்சாட்டில், கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு இராணுவத்திடம் மாட்டிக்கொண்டனர்.

இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சமீபத்தில் நிருபனமானது.

இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here