கோலாலம்பூர்:
தாய்லாந்தில் மோசடிக் கும்பல் சிறை வைத்துள்ள மலேசியர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் கோலாலம்பூரில் உள்ள தாய்லாந்துத் தூதரகத்திற்கு வெளியே நேற்று ஒன்றுதிரண்டனர்.
தங்களது குடும்பத்தைச் சேர்ந்தோரைத் தாய்லாந்து அரசாங்கம் விடுவிக்க வலியுறுத்தி புதன்கிழமை (பிப்ரவரி 12) பிற்பகலில் ஏறத்தாழ 40 பேர் அங்கு திரண்டதுடன், தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது அன்புக்குரியோரை மீட்டுத் தரக் கோரி மனு ஒன்றை தூதரக அதிகாரி அதித்தா புவாகாம்ஸ்ரியிடம் கையளித்தனர்.
குற்றக் கும்பல்கள், தாய்லாந்தில் வேலை தருவதாகக் கூறி மலேசியர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று அங்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவ்வாறு சிக்கியுள்ளோரை உடனடியாக மீட்டுத்தரக் கோரி அவர்களின் குடும்பத்தினரை ஒன்றுதிரட்ட மலேசியாவின் அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் தலைமைச் செயலாளர் ஹிஷாமுதின் ஹாஷிம் உதவினார்.
“மோசடிக்கு ஆளானோர் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். “இருட்டறையில் அடைக்கப்படுகிறார்கள். “உணவு எதுவும் தரப்படாமல், குடிக்கத் தண்ணீர் மட்டும் அவர்களுக்குத் தரப்படுகிறது. அடிமைகள் போல வேலைசெய்யுமாறு அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்,” என்று ஹாஷிம் மேலும் கூறினார்.
இதற்கு முன்பு மோசடிக் கும்பலிடம் சிக்கிய சீன நடிகர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்றும் அதேபோல மலேசியர்களை விடுவிக்கவும் அவர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





















