அடுத்த ஆண்டில் RM180 மில்லியன் ஒதுக்கீட்டில், 100 மின்சார பேருந்துகள் உட்பட 300க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகளை Rapid Bus நிறுவனத்தின் மூலம் சேவையில் ஈடுபடுத்த பிராசாரானா திட்டமிட்டுள்ளது.
பிராசாரானாவின் தலைவரும், குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியுமான முகமட் அசாருதீன் மட் சா கூறுகையில், தலைநகரில் உள்ள மக்களின் பயணத் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், இதன் முதல் கட்டம் RapidKL சேவைகளை மட்டுமே உள்ளடக்கும் என்றும் அவர் கூறினார்.
“மின்னூட்டல் செயல்முறைக்காக பேருந்து நிலையங்களிலுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மின் கேபிள்களை மேம்படுத்தும் பணிக்கான குத்தகைகளை, நாங்கள் 2023 முதல் காலாண்டில் திறப்போம்” என்றும் அவர் கூறினார்.
“இப்போது, எங்களிடம் மொத்தம் 1,540 RapidKL பேருந்துகள் உள்ளன, ஆனால் தினசரி சேவையில் 1,183 மட்டுமே இயக்கப்படுகின்றன. சிங்கப்பூர் போன்ற திறமையான பொதுப் போக்குவரத்து உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பேருந்துகளின் எண்ணிக்கை இன்னும் நமது நாட்டில் மிகக் குறைவு,” என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்தாண்டு சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்படும் பேருந்துகளில் ஏழு முதல் எட்டு மீட்டர் நீளம் கொண்ட 45 மின்சார மினி பேருந்துகளையும், 10 முதல் 12 மீட்டர் அளவுள்ள 55 பெரிய அளவிலான பேருந்துகளையும் பிராசாரனா அறிமுகப்படுத்தும் என்று முகமட் அசாருதீன் கூறினார்.