சீனாவில் 1949ம் ஆண்டில் நடந்த உள்நாட்டு போரின்போது, சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தனி நாடாக உருவெடுத்தது. ஆனால் சீனாவோ தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தைவானை ஆக்கிரமிக்க படைபலத்தை பயன்படுத்தவும் சீனா தயாராகி வருகிறது.
இந்நிலையில் சீன இராணுவம் அடிக்கடி தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதுடன, போர் விமானங்களை தைவான் வான்பரப்பில் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது. எனவே சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க தனது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தைவான் எடுத்து வருகிறது.
தைவானை பொறுத்த வரையில் அந்த நாட்டை சேர்ந்த ஆண்கள் 4 மாதங்களுக்கு இராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. தற்போது இந்த கட்டாய இராணுவ சேவை ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு வருட கட்டாய இராணுவ சேவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், 2005ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் எனவும் தைவான் அதிபர் சாய் இங் வென் கூறினார்.
அதே வேளையில் 2005ம் ஆண்டுக்கு முன் பிறந்த ஆண்கள் தொடர்ந்து 4 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.