கோலாலம்பூர்:
“Public Mutual” நிறுவனத்தில் RM150 மில்லியன் முதலீடு தொடர்பில் RM2.8 மில்லியன் ஊழல் மோசடி தொடர்பான வழக்கில், புங் மொக்தார் தம்பதியினருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்குத் தற்காப்பு வாதம் புரிவதை ஒத்திவைப்பதற்காக விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் மீண்டும் இன்று அனுமதி அளித்துள்ளது.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ஸிஸி இசாத்தி அப்துல் சாமாட் ஆகியோருக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு, அகற்றப்படுவதற்குக் காத்திருக்கும் காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட தற்காப்பு வாதத்திற்கான செவிமடுப்பை ஒத்தி வைக்க டத்தோ ஶ்ரீ புங் மொக்தாரும், டத்தின் ஶ்ரீ ஸிஸி இசாத்தியிடமும் கேட்டுக் கொண்டதாக, அவர்களின் வழிக்கறிஞர் எம். ஆதிமூலம் நீதிமன்றத்திடம் தெரிவித்தப் பின்னர், நீதித்துறை ஆணையர் டத்தோ அசார் அப்துல் ஹமிட் அதற்கு அனுமதி அளித்தார்.
குறித்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் சோபியான் சகாரியாவும் அந்த விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அமர்வு நீதிமன்ற நீதிபதி ரொசினா அயோப் முன்னிலையில், இன்று முதல் நாளாக அத்தம்பதியரின் தற்காப்பு வாதம் நடத்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்தாண்டு செப்டம்பர் 23-ஆம் தேதியும் அவர்களுக்கு எதிராக நடைபெற இருந்த தற்காப்பு வாதத்தை, ஒத்திவைப்பதற்கு நீதிபதி டத்தோ கோல்லின் லாரன்ஸ் செகுவேரா அனுமதி அளித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.