நேற்றிரவு, ஷா ஆலாம், பத்து 3விலுள்ள முன்னாள் டோல் பிளாசாவிற்கு அருகிலுள்ள கூட்டரசு நெடுஞ்சாலையில், அவர் ஓட்டிச் சென்ற லோரி தீப்பிடித்து எரிந்ததில், அதன் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இரவு 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர், சாதுரியமாக செயற்பட்டு லோரியிலிருந்து இறங்கியதால் உயிர் பிழைத்தார் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர், டத்தோ நோராஸாம் காமிஸ் கூறினார்.
இரவு 10.38 மணிக்கு சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்தவுடன், Kota Anggerik தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்றும் நோராஸாம் கூறினார்.
லோரி 90 விழுக்காடு எரிந்துள்ளதாகவும் ஆனால் ஓட்டுநர் பாதுகாப்பாக உள்ளதாகவும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.