அரசு சேவைகளில் மலாய்காரர்களின் ஆதிக்கத்தை உடைக்க சீர்திருத்தங்கள் தேவை என்ற கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விஷயத்தை ஒரு பிரச்சினையாகப் பார்க்காததே இதற்குக் காரணம் என்று, இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) மற்றும் MYFutureJobs 2023 தொழில் திருவிழா ஆகியவற்றைத் தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை (பிப். 10), பினாங்கு துணை முதல்வர் II டாக்டர் பி. ராமசாமி, தனது முகநூலில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், அரசு சேவைகள் துறையில் இப்போது மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி, அரசாங்கத்தை சீர்திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கையாள்வதோடு, பொதுச் சேவையானது இந்நாட்டின் இனக் கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த முன்மொழிவு, ராமசாமியின் தனிப்பட்ட கருத்து என்றும் இது DAP கட்சியினதோ அல்லது அரசாங்கத்தின் கருத்தையோ பிரதிபலிக்கவில்லை என்றும், மக்கள் பேசுவதையோ, கருத்துகளை கூறுவதையோ நாம் தடுக்கக் கூடாது. அவரவர் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மேலும் கூறினார்.