பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, மலாக்காவின் ஜாசினிலுள்ள தொழிற்சாலைக்கருகில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
“மலேசியப் பறக்கும் அக்காடமி (MFA) மூலம் இயக்கப்படும் Piper PA-28-181, 9MSKJ சிறிய ரக விமானம் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் மையத்தைக் கோரியது.
“இருப்பினும், இன்று (பிப்ரவரி 14) காலை 11:05 மணிக்கு மலாக்கா, ஜாசின், Xinyi Energy Smart Factory அருகே அது அவசரமாக தரையிறங்கியது” என்று, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி, கேப்டன் நோரஸ்மான் மஹ்மூட் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த விமானத்தில் ஒரு பயிற்றுவிப்பாளரும் மாணவர் ஒருவரும் இருந்ததாகவும், இந்த அவசர தரையிறக்கம் காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.