2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 10,000 கிலோமீட்டர் ஆற்றுப் பாதைகளை உருவாக்குவதற்கு, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (NRECC) திட்டமிட்டுள்ளதாக, அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.
இதில் 2023 ஆம் ஆண்டில் 1,000 கிமீ ஆற்றுப் பாதைகளை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் கட்டுமானம் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையால் கையாளப்படும் என்றும், இத்திட்டம் மூலம் “அதாவது நதிப் பாதைகள் அமைப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களிடையே சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளையும் அது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப் 19) குபாங் கெரியானில் உள்ள சுங்கை பெங்கலான் டத்துவில் அமைக்கப்படட நதிப்பாதையை பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பெங்கலான் டத்து பகுதியில் உள்ள மிதக்கும் சந்தை போன்றவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்கின்றன, அதுபோல தேசிய நதிப் பாதை முன்முயற்சி திட்டமும் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நிக் நஸ்மி கூறினார்.
“இந்த இலக்கை அடைய, எனது அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து, பாதை கட்டுமானம் மற்றும் நதியை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் அவற்றை பொழுதுபோக்கு பகுதிகளாக உருவாக்க தேவையான ஆறுகளை அடையாளம் காணும்,” என்று அவர் மேலும் கூறினார்.