Kampung Jambu Bongkok அருகே ஜாலான் கோலா திரெங்கானு-குவாந்தான் சாலையின் 54வது கிலோமீட்டரில் கார் ஒன்று விபத்தில் சிக்கியதில், இருவர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர்.
இன்று பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரின் முன்பக்க பயணி முஹமட் ரபிஸான் ரோஸ்லான் (23) மற்றும் பின்பகுதியில் பயணித்த நூர்ஸ்யாஸ்வானி ஷம்சுதின் சாடின் (17) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அதே நேரத்தில் கார் ஓட்டுநரான முஹமட் சாஹ்ருல் ஷம்சுதீன் சாடின், 24, மற்றும் காரின் பின்பக்கத்தில் வலப்புறம் இருந்த பயணியான முஹமட் சுஹைமி ரோஸ்லான், 18 ஆகியோர் படுகாயமடைந்ததாக, மராங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் முகமட் ஜெய்ன் மாட் ட்ரிஸ் தெரிவித்தார்.
கோலா திரெங்கானுவில் இருந்து டுங்கூன் நோக்கிச் சென்ற ஹோண்டா சிவிக் ரக கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பு மற்றும் மின் விளக்கு கம்பத்தில் மோதியதால், இவ்விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
பலியான இருவரின் உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக டுங்கூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் , அதேவேளை, படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஜெய்ன் மேலும் தெரிவித்தார்.