மலாக்காவிலுள்ள ஒரு சொகுசு மாடிக் குடியிருப்பை போதைப்பொருள் பொட்டலமிடல் மற்றும் விநியோக மையமாக பயன்படுத்திய போதைப்பொருள் கும்பலை சேர்ந்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பிப்ரவரி 23 அன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 24 மற்றும் 35 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் ஜோகூரில் உள்ள பத்து பஹாட் மாவட்டத்தில் விநியோகம் செய்வதற்காக சியாபு போதைப்பொருளை பொதி செய்ய குறித்த சொகுசு மாடியின் யூனிட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
சோதனையின் போது RM100,000 மதிப்பிலான 3.1 கிலோ போதைப் பொருட்கள், RM13,000 ரொக்கம் உட்பட RM21,763 பெறுமதியான சந்தேக நபர்களின் உடமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று டிசிபி ஜைனோல் கூறினார்.
“சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது உறுதிப் படுத்தப்பட்டது மற்றும் அவர்களுக்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இவ்வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.