செரெண்டா அருகே ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
யமஹா Y15 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்து, நேற்று மாலை 6.38 மணியளவில் நடந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சுஃபியன் அப்துல்லா கூறினார்.
உயிரிழந்த 24 வயதுடைய நபர் அந்தாரா காபியில் இருந்து ரவாங்கிற்கு பயணித்தபோது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் மின் கம்பத்தில் மோதியதாக நம்பப்படுகிறது, மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாக் குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சுஃபியன் கூறினார்.