ராமேஸ்வரி ராஜா
தாப்பா, ஜூன் 29:
சற்றுமுன் இங்குள்ள தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி, காவல் நிலையத்தின் பாதுகாப்புச் சாவடி மீது கன்டெய்னர் டிரக் லோரி மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால் பணியில் இருந்த போலீஸ் காவலர் ஒருவர் காயமடைந்தார் என்பதுடன் பாதுகாப்பு சாவடி முற்றாக சேதமடைந்தது.
அதிகாலை 1.25 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நாற்காலிகள் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லோரி, கோலாலம்பூரில் இருந்து ஈப்போ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் பிரதான வேலி மற்றும் பாதுகாப்புச் சாவடியில் சறுக்கி மோதி விபத்துக்குள்ளானது என தாப்பா மாவட்ட போலீஸ் துறைத் தலைவர், வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதனால் அங்கு பணியில் இருந்த 23 வயதுடைய லான்ஸ் கார்ப்ரல் ஜோவி ஜிஹோம், பாதுகாப்புச் சாவடியில் சிக்கிக் கொண்டார். பின்னர்,
மீட்புக் குழுவினரால் விடுவிக்கப்பட்டார் எனவும் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.
முகம் மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டதையடுத்து ஜோவி ஜிஹோம் மேற்கொண்டு சிகிச்சைக்காக தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கன்டெய்னர் லோரியின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. மேலும் சிறுநீர் பரிசோதனைக்காக தாப்பா போலீஸ் தலைமையக போதைப்பொருள் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் வான் கூறினார்.
இந்த மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு போலீஸ் லேண்ட் ரோவர் ஆகியவை சேதமடைந்தன.
இச்சம்பவம் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் லோரி ஓட்டுனர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் மேலும் இது குறித்து கூறுகையில் அவர் தெரிவித்தார்.