வாஷிங்டன்: சீன நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் சமூக ஊடகச் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் பலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
‘கொன்டென்ட் கிரேய்ட்டர்ஸ்’ எனப்படும் டிக் டாக்கில் காணொளிகளையும் படங்களையும் அடிக்கடி பதிவேற்றம் செய்யும் பலர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டிக் டாக்கை நடத்தும் நிறுவனமான பைட்டான்ஸ், அச்செயலியைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்து அவற்றை சீன அரசாங்கத்துக்கு வழங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதைத் தொடர்ந்து டிக்டாக்கை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
எனினும், பயனீட்டார்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் டிக்டாக்கில் மட்டும் இல்லை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதம். அதிகாரிகள் பொதுவாகவே தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்; அவர்கள் பயனீட்டாளர்களைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சொல்கின்றனர். டிக் டாக்கால் தங்களின் வர்த்தகம் பெரிதும் பலனடைந்திருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தின் தொடர்பில் நேற்று டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷுவோ ஸி சியூவைக் கடுமையான கேள்விகள் கேட்க அமெரிக்க அரசியல் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது டிக்டாக் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் சீன அரசாங்கத்துடன் பகிரப்படாது என்று திரு சியூ வாக்குறுதி தருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.