சண்டாக்கான் கடலில் படகு கவிழ்ந்ததில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த 11 பேர், தேசிய கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

சண்டாக்கான் கடலில் படகு கவிழ்ந்ததில் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த 11 பேர், தேசிய கடற்படையால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமை (மார்ச் 29) தவாவில் இருந்து செம்போர்னாவுக்குச் செல்லும் போது, மோசமான வானிலை காரணமாக கடலில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் பெரிய அலைகளால் தாக்கப்பட்டு, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தது.

தங்களை யாராவது வந்து காப்பாற்ற வேண்டும் என தாம் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

அதிஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சரக்குக் கப்பலின் பணியாளர்களால் கண்டறியப்பட்டு, தேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர் என்று, நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) தேதியிட்ட சண்டாக்கான் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பூலாவ் தாம்பிசானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் மேல் நடவடிக்கைக்காக லஹாட் டத்து கடல்சார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here