போதுமான நிதி இல்லாததால் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து மார்ச் 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடியால் உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான நிதி வழங்குவதை அரசு உறுதி செய்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையக்குழுவின் இயக்குனர் சமன்ஸ்ரீ ரத்நாயக்கா தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கின.

சமீபத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவியை அறிவித்தது. இதற்கிடையே இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசிடம் இல்லை என்று அதிபர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here