நோன்புப்பெருநாள் விடுமுறைக்காக ஜோகூர் பாருவில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் விரைவுப் பேருந்து டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்று தீர்ந்துவிட்டன.
இதுவரை 90 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், அவற்றில் ஜோகூரிலிருந்து கிளாந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பினாங்கு ஆகியவை பிரபலமான வழித்தடங்களாக உள்ளன என்று, ஜோகூர் பேருந்து நடத்துனர்கள் சங்கத்தின் தலைவர், டத்தோ டாக்டர் சுச்தவ் ஜோடிஸ்ட்ரோப் கூறினார்.
“ நோன்பு மாதத்தின் முதல் வாரத்தில் பெரும்பாலானோர் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர், கிளாந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சிங்கப்பூரில் பணிபுரிவதுடன், ஜோகூர் பாரு, பாசீர் கூடாங், கூலாய் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் அவர்கள் வசித்து வருவதே இதற்குக் காரணம் என்று சுச்தவ் கூறினார்.