இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை இராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அனைத்துலக விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை இராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது.இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 185 பேர் உயிரிழந்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூடானில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.























