கையை பிடிக்கத்தவறிய கணவனால் சர்க்கஸ் நிகழ்ச்சியில் பல அடி உயரத்தில் இருந்து விழுந்த மனைவி பலி

சீனாவின் ஷாங்காய் மாகாணம் சுஹோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ் (வயது 37). கணவன் மனைவியான இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.சுஹொங்க் மற்றும் சன் ஆகிய இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அந்தரத்தில் தொங்கியபடி ஒருவரை ஒருவர் பிடித்து மிகவும் அபாயகரமான சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் இருவரும் திறன் வாய்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், அந்நகரின் ஹொவ்ஹா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுஹொங்க் மற்றும் சன் சர்க்கஸ் கலைஞர் தம்பதி பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அந்தரத்தில் தொங்கியபடி சுஹொங்க் மற்றும் அவரது மனைவி சன் ஆகியோர் சர்க்கஸ் செய்துகொண்டிருந்தனர். சுஹொங்க் தனது உடலில் கயிறை கட்டிய படியும் அவரது மனைவி சன் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சர்க்கஸ் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, சுஹொங்க் அந்தரத்தில் தொங்கியபடி தன் மனைவி சன்னை மேலே வீசினார். அவர் தனது மனைவியை அந்தரத்தில் காலால் படிக்க வேண்டும். ஆனால், சற்று தடுமாறிய சுஹொங்க் தனது மனைவியின் கையை தன் காலால் பிடிக்க தவறிவிட்டார். இதனால், 32 அடி உயரத்தில் இருந்து சன் கீழே விழுந்தார். இந்த விபத்து சுற்றி இருந்த பார்வையாளர்கள் முன் அரங்கேறியது. சர்க்கஸ் கலைஞர் சன் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுவதை அவரது கணவர் சுஹொங்க் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் நேரில் கண்டார்.

இந்த சம்பவத்தில் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சர்க்கஸ் கலைஞர் சன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சர்க்கஸ் கலைஞர் சன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய அனுமதி, பாதுகாப்பு இன்றி சர்க்கஸ் நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here