சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள பெங்டாய் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் மருத்துவமனை முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
இதனையடுத்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர். எனினும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 21 பேர் உடல் கருகி பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





















