கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட மலேசிய ஊழல் எதிர்ப்பு அகாடமி (MACA) கட்டிடம் மே 18-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கட்டிடத்தில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம், கழிவுநீர் அமைப்பு ஆகியவை சீரமைக்கப்பட்டவுடன், தற்காலிக சாலை அமைக்கப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று பணிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
மேலும் MACA கட்டடத்திற்கு முன் வளாகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் இன்று மாலை 90 விழுக்காடு முடிவடைந்துள்ளது.
கூடிய விரைவில், ஜோகூர் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் FILLING கம்பிகளை பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச பொதுப்பணித் துறை இயக்குநர் டத்தோ நோர்மான் முகமட் ரபானி தெரிவித்தார்.
இந்நிலையில், மண்சரிவு மற்றும் மண் அரிப்பு சம்பவங்கள் ஏதும் புதிதாக பதிவாகாவிடில், சம்பவ இடத்தில் உள்ள சோதனை சாவடி நாளை காலை மூடப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக MACA-விடம் ஒப்படைக்கப்படும் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பெ எங் லாய் தெரிவித்தார்.