ஷா ஆலாம் அருகே உள்ள பூலாவ் இண்டா, லகுனா பூங்காவின் வெளியேறும் பகுதியில் மின்சாரம் தாக்கியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் நேற்று மாலை இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு துறைக்கு மேற்று மாலை 4.04 மணிக்கு தகவல் வந்ததாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு தமது குழு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் அங்கு மின்சாரக் கசிவு இன்னும் இருந்ததால் மீட்புக் குழு தெனகா நேஷனல் நிறுவன உறுப்பினர்களுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.
“இரவு 11.45 மணியளவில், TNB 33 கிலோவோல்ட் (KV) மின்சாரத்தை நிறுத்தியது அதன் பின்னர் பாதிக்கப்பட்டவரின் சடலம் நள்ளிரவு 12.15 மணியளவில் மீட்கப்பட்டது ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்த 30 வயதுடையவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.









