கடந்த வியாழக்கிழமை பூச்சோங்கின் பண்டார் கின்ராராப் பகுதியில் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக மே 18 வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று, சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
போலீசார் இந்த வழக்கை கொலை என வகைப்படுத்தியுள்ளனர் என்றும், கொலைக்கான காரணம் குண்டர் கும்பல் நடவடிக்கை மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட 31 வயதுடைய நபர் பல குற்றப் பதிவுகளை வைத்திருப்பதாகவும், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்று, அவர் இன்று செர்டாங்கில் உள்ள ஸ்ரீ கெம்பாங்கன் காவல் நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.