கோலாலம்பூர்:
கெடா, கோத்தா ஸ்டார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு வேளைகளில் மர்மமான முறையில் வீட்டின் கதவுகள் தட்டப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்த அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலிசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கெடா மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ போலிஸ் புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் அமீரா, அவானா, சாத்ரியா, விஸ்தானா, லேலாசாரி மற்றும் தெலுக் ஜமாட் ஆகிய ஆறு குடியிருப்புப் பகுதிகளில் இத்தகைய மர்ம நிகழ்வுகள் நடப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று, டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
இச்சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் விரிவாக ஆராய்ந்தனர். ஆனால், கதவுகளுக்கு அருகில் மனிதர்களோ அல்லது வேறு எந்தவித சந்தேகத்திற்கிடமான அசைவுகளோ பதிவாகவில்லை.
கடந்த ஆண்டு பாலிங் பகுதியில் நிகழ்ந்த வினோத தீ விபத்துச் சம்பவத்தைப் போல இச்சம்பவத்தைக் கருதி பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இச்சம்பவங்கள் மெர்கோங் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நிகழ்வுகள் குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
























