கம்போங் செபெராங் ஜெலாய் என்ற இடத்தில் இன்று காலை 450 கிலோ கெத்தும் இலைகளுடன் ஓர் ஆடவர் கைது செய்யப்படத்தைத் தொடர்ந்து, கோலா லிப்பிஸ் மாவட்டத்தில் அதிகளவான கெத்தும் இலைகள் கைப்பற்றப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
33 வயதான சுயதொழில் செய்யும் சந்தேக நபர், காலை 6.45 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டதாக லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், அஸ்லி முகமட் நூர் கூறினார்.
மேலும் அவரிடமிருந்து கெத்தும் இலைகளைத் தவிர, கோடீன் கொண்ட இருமல் சிரப்பிற்கு கலவையாகக் கருதப்படும் 400 கருப்பு திரவ போத்தல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“எல்லா கெத்தும் இலைகள் மற்றும் திரவங்கள் கருப்பு பிளாஸ்டிக்கில் காணப்பட்டன என்றும் கிராமத்தில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்றும், முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் அனைத்து பொருட்களையும் கெடாவின் சிக் நகரிலிருந்து பெற்றதாக நம்பப்படுகிறது” என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவை தவிர ஒரு பராங் கத்தி மற்றும் RM550 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும், கைப்பற்றப்பட்ட முழு சொத்துக்களின் மற்றும் பொருட்களின் மதிப்பு சுமார் RM11,050 என்றும் அஸ்லி கூறினார்.
திருட்டு, துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் வேண்டுமென்றே ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தல் ஆகிய குற்றங்களுக்கான 10 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.