சிரம்பான் மாவட்டம் முழுவதும் உள்ள சூராவ் மற்றும் மசூதிகளின் உண்டியல்களை உடைத்து திருடும் கும்பலை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 26 மாலை 6.30 மணியளவில், சந்தேக நபர்கள் இங்குள்ள பரோய்க்கு அருகிலுள்ள தாமான் டத்தோ வானில் உள்ள ஒரு சூராவின் பணப்பெட்டியில் இருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது என்று, சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அரிபாய் தாராவே கூறினார்.
சூராவ் பணப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் அனைத்தும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகக் கூறி, கடந்த புதன்கிழமை இரவு 8.56 மணிக்கு, தாமான் டத்தோ வானில் உள்ள சூராவ் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்தது. இது சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அறிக்கை செய்யப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் விளைவாக, ஜூன் 1 முதல் நேற்று வரை 26 முதல் 28 வயதுடைய மூன்று பெண் சந்தேக நபர்கள் தொடர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த வழக்கில் சந்தேக நபரை கைது செய்ததன் மூலம், சிரம்பானைச் சுற்றியுள்ள மசூதி மற்றும் சூராவ் -களில் நடந்த திருட்டுகள் தொடர்பான மூன்று வழக்குகளை போலீசார் தீர்க்க முடிந்தது.
“விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் ஜூன் 5 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.