கூலாய், இண்டாபுராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 7,000 ரிங்கிட் மதிப்புள்ள ஆப்பிள் ரக கைத்தொலைபேசியை வாங்குவதற்கு போலியான பணப்பரிமாற்றல் பத்திரத்தை சமர்ப்பித்த 24 வயது இளைஞன் ஒருவன்போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 9) மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் குறித்த மொபைல் போன் விற்பனை கடையில் இருந்த தொழிலாளி ஒருவரை அணுகி, தான் RM7,350 மதிப்புள்ள iPhone 14 Pro Max ஐ வாங்குவதற்கு, RM500 மதிப்புள்ள டெபாசிட் மற்றும் RM6,850 இணையம் மூலம் செலுத்தியதாக கடை ஊழியரை நம்ப வைத்தார் என்று, கூலாய் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் யூசப் ஓத்மான் கூறினார்.
“சந்தேக நபர், கடையின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலியான இணையக் கட்டண ரசீதைக் காட்டி, ஐபோனை பெற்றுச் சென்றார் என்று, அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மேலும் கூறினார்.
இருப்பினும் கடை ஊழியர் ஆய்வு நடத்திய பிறகு, கடை கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்பதை கண்டுபிடித்தார், பின்னர் தொழிலாளி காவல்துறையில் புகார் அளித்தார் என்று அவர் கூறினார்.
புகாரின் அடிப்படையில் “தாமான் சூத்ராவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வைத்து, சந்தேக நபர் சனிக்கிழமை (ஜூன் 10) மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
“போலி ஐபோன் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மற்றும் சந்தேக நபரின் ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்,” என்றும், சந்தேக நபருக்கு ஐந்து முந்தைய குற்றப்பதிவுகள் இருந்தன என்பது பின்னணி சோதனையில் தெரியவந்தது.
சந்தேகநபர் தற்போது நேற்று முதல் ஜூன் 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று .யூசப் ஓத்மான் கூறினார்.