தீவுகளில் குடியேறினால் €80,000 பரிசு; அயர்லாந்து அதிரடி அறிவிப்பு

வெளிநாடுகளில் சென்று குடியேற வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் நமது கனவிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது பணம் மட்டுமே. நடுத்தர மக்கள் அனைவருக்கும் வெளிநாட்டு பயண ஆசை இருந்தும் பணம், குடியுரிமை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அந்த கனவு தகர்ந்து போகிறது.

ஆனால் ஒரு நாடு உங்களுக்கு குடியுரிமையும் தந்து அங்கு குடியேறுவதற்கு பணமும் தருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு அறிவிப்பை தான் அயர்லாந்து அரசு வெளியிட்டு உள்ளது. ‘அவர் லிவிங் ஐலேண்ட்’ என்ற திட்டத்தின் மூலம் அயர்லாந்து அரசு தங்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள தீவுகளில் வெளிநாட்டினரை குடியேற்ற முடிவு செய்துள்ளது. அந்த திட்டத்தின் நோக்கம் என்ன ? பணம் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? யாரெல்லாம் குடியுரிமை பெறலாம் ? என்பவை குறித்து பார்க்கலாம்.

அவர் லிவிங் ஐலேண்ட் திட்டம் : அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. அதனால் அயர்லாந்தில் உள்ள பல தீவுகளில் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. ஒரு சில தீவுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100க்கும் கீழே குறைந்து காணப்படுகிறது.

மக்கள் தொகையை அதிகரிக்க “அவர் லிவிங் ஐலேண்ட்” என்னும் திட்டத்தை அயர்லாந்து அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதோடு €80,000 வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் விதிமுறைகள் சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அயர்லாந்து நாட்டில் குடியுரிமை பெற விரும்பும் நபர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை,

* குடியுரிமை பெற விரும்புபவர்கள் முதலில் அயர்லாந்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள தீவு ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

* பின்னர் அவர்கள் அந்த தீவில் கட்டாயம் ஒரு நிலத்தையோ, கட்டிடத்தையோ விலைக்கு வாங்க வேண்டும். அந்த நிலம் அல்லது வீடு 1993ம் ஆண்டுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.

* அப்படி அவர்கள் வாங்கும் சொத்து இரண்டு ஆண்டுகளாக காலியாக இருக்க வேண்டும்.

* அரசு வழங்கும் €80,000-த்தில் கட்டாயம் அந்த சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் பராமரிப்புக்கு மற்றும் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டால் வருகிற ஜூலை 1 முதல் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என அயர்லாந்து அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புகள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும் சிலர் இந்த திட்டத்தை வரவேற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here