கோத்தா பெலூட்டிலுள்ள கம்போங் சங்கீரில், இன்று அதிகாலை அவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்ததில், தம்மைக் காப்பாற்றிக்கொள்ள அவ்வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பெண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கால்களில் லேசான காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட 46 வயதுடைய பெண் மற்றும் அவரது 14 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களுக்கு கால்களில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று, கோத்தா பெலூட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் சியாஸ்வான் லதுன் கூறினார்.
சம்பவம் குறித்து அதிகாலை 1.40 மணிக்கு தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே இயந்திரங்கள் மற்றும் அவசர சேவை உதவிப் பிரிவு (EMRS) என மொத்தம் எட்டு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
”தீ விபத்தில் குறித்த இரண்டு மாடி வீடு முற்றிலும் எரிந்து நாசமானது,” என்று அவர் கூறினார்.
“லேசான காயம் அடைந்த மூவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுபப்பபட்டனர் என்றும் அதிகாலை 3 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.