சென்னை, ஆகஸ்ட்டு 7 :
‘அங்காடித்தெரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. தொடர்ந்து அவர் சின்னத்திரையில் நடித்து வந்தது மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.
கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
வறுமை காரணமாக போராடிய அவருக்கு நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் மற்றும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக உதவினர். உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில் சிந்து, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் 42 வயதான சிந்து, இன்று அதிகாலை 2.15 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சிந்துவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச்சடங்கு இன்று மாலை 3:30 மணியளவில் வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற்றது.