சிங்கப்பூரில் வேலை செய்வோர் எளிதில் மலேசியாவுக்குள் நுழைவதற்கு வசதியாக ஜோகூரின் ஃபாரஸ்ட் சிட்டி சிறப்பு வட்டாரமாக மாற்றப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இஸ்கந்தர் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் வகையில் பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஃபாரஸ்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பு நிதி வட்டாரமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்றார்.
மேலும் அவர்களுக்கு பலமுறை நாட்டுக்குள் நுழைவதற்கான விசாக்களை அனுமதித்தல், சிங்கப்பூரில் வேலை பார்ப்போர் துரிதமாகக் குடிநுழைவில் அனுமதிக்கப்படுதல், அறிவுசார் ஊழியர்கள் அனைவருக்கும் 15% வருமான வரி விதிப்பு ஆகிய சலுகைகளின் பட்டியலில் பிரதமர் அறிவித்தார்.
“சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, சுற்றுப்பயணம் போன்ற துறைகளில் உள்ளோரது வளர்ச்சிக்கு இது உதவும்,” என்று தமது 2024 வரவுசெலவுத் திட்டத்துக்கான கருத்துத் திரட்டின்போது, பிரதமர் கூறினார்.
“சிங்கப்பூரில் அதிகப்படியான செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ள நிறுவனங்கள் பல, இத்திட்டத்தால் ஈர்க்கப்படும் என்று நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்,” என்றார் அவர்.
மேலும் சிங்கப்பூரில் வீடமைப்பு, கல்வி தொடர்பான கட்டணங்களும் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியக் குடிநுழைவுத் துறை இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கு அருகில் ஜோகூர் இருப்பதால், ஒன்று மற்றொன்றோடு போட்டிப் போடாமல் மலேசியா, சிங்கப்பூர் ஒன்றுக்கொன்று துணை போகலாம் என்றார் அவர்.