மலாக்கா:
பந்தாய் புத்திரி, தஞ்சோங் கிளிங்கில் உள்ள உணவகத்திற்குள் 16 வயது சிறுவன் கவனக்குறைவாக காரை பின்னோக்கி செலுத்தியதால், அவ்வுணவகத்தின் வாடிக்கையாளர்கள் காரால் மோதப்பட்டனர்.
நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 2.43 மணியளவில் நடந்த சம்பவத்தில், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மலாக்கா தெங்கா OCPD துணை ஆணையர், கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.
குறித்த சிறுவனும் அவரது குடும்பத்தினரும் சிரம்பானிலிருந்து விடுமுறைக்கு மலாக்கா வந்திருந்தனர் என்றும் , அந்த வாலிபரிடம் வாகனத்தின் இன்ஜினை சூடேற்றுமாறு 51 வயதான அவரது தாயார் கூறியதாகவும், ஆனால் அதற்குள் அவர் காரின் கியரை அழுத்தியதால் அது உணவகத்திற்குள் புகுந்ததாகவும் அவர் கூறினார்.
குறித்த கார், உணவகத்தின் மீது மோதுவதற்கு முன்பு அதன் அருகில் நிறுத்தப்பட்ட மற்றொரு காரை மோதியது என்றும், இந்த சம்பவம் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.