அரசு செயலிகளுக்கு தனி அடையாளம் வழங்கும் கூகுள்: ப்ளே ஸ்டோரில் போலிகளுக்கு ஆப்பு

போலி செயலிகளிடம் பொதுமக்கள் ஏமாதிருக்க, அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் செயலிகளுக்கு தனி பேட்ஜ் அடையாளத்தை வழங்க கூகுள் முன்வந்திருக்கிறது

இணையத்தின் சகல திசைகளிலும் போலிகள் மலிந்திருக்கும். மொபைல் போன்களுக்கான செயலிகளும் அதில் விதிவிலக்கல்ல. இந்த போலி செயலிகளை மொபைலில் இன்ஸ்டால் செய்யும்போது, அவை உளவுபார்ப்பது முதல் தனிப்பட்ட தரவுகளை களவாடுவது வரை விபரீதங்களுக்கு வழி வகுக்கும்.

கூகுளின் செயலி சந்தையான ப்ளே ஸ்டோரில், இந்த போலிகளை கட்டுப்படுத்த பலவகையிலும் கூகுள் நிறுவனம் முயன்று வருகிறது. குறிப்பாக அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் செயலிகள் மத்தியில் ஊடுருவலைத் தவிர்க்க புதிய ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளது. இந்த வகையில் அரசு நிறுவனங்களின் செயலிகளுக்கு கீழே கவர்ன்மெண்ட் (Government) என்ற அடையாளத்தை தற்போது கண்டுகொள்ளலாம்.

இனி அரசு சார்ந்த mAadhaar, Digi Locker மற்றும் mParivahan போன்ற செயலிகளை தேடும்போது, அதன் Government என்ற ஐகானைக் உறுதி செய்துகொள்வது நல்லது. அந்த ஐகானை சொடுக்கும்போது, மேற்கொண்டு விரியும் ​​பாப்-அப் ’இந்த செயலி அரசு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது சரிபார்க்கப்பட்டுள்ளது’ என்ற தகவலைக் கொண்டிருக்கும்.

பொதுவாக கூகுளின் ப்ளே ஸ்டோரில் செயலிகளை தரவிறக்கம் செய்யும் முன்னர், அதன் பாதுகாப்பு குறித்த சான்றையும் சரிபார்ப்பது நல்லது. இதன் மூலம் பாதுகாப்பற்ற மற்றும் போலிகளை பயனர்கள் தவிர்த்து விடலாம். தற்போது கூடுதல் அம்சமாக அரசின் செயலிகளை தனி பேட்ஜ் அடையாளம் மூலம் எளிதில் கண்டுகொள்ள முடியும்.

ஏனெனில் அரசு வழங்கும் செயலி என்றதுமே சாமானியர்கள் மத்தியில் அதன் மீதான நம்பகத்தன்மை இயல்பாக அதிகரித்து இருக்கும். போலி ஆப் என்று தெரியாது, அது கோரும் தகவல்களை அளிக்கவும், இணைப்புகளை சொடுக்கவும் வாய்ப்புண்டு. எனவே ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் அரசின் செயலிகளை தனித்து அடையாளமிடுவது கூடுதல் அவசியமாகிறது.

இந்த வகையில் இந்தியாவில் உள்ள கூகுள் பயனர்களுக்காக ப்ளே ஸ்டோரின் அண்மை அப்டேட்டாக இந்த பேட்ஜ் சரிபார்ப்பு சேர்ந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 செயலிகள் இவ்வாறு பேட்ஜ் அனுகூலத்துடன் கிடைக்கின்றன. அதிலும் இந்தியா போன்ற, இணையம் மற்றும் செயலிகள் பயன்பாட்டில் போதிய பரிச்சயம் இல்லாதவர்கள் ஊடாடும் தேசத்தில், ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் சாமானியர்கள் சிக்காதிருக்கவும் இந்த ஏற்பாடு உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here