கோலாலம்பூர்:
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசிக்கு மலேசியர்கள் மாதம் 21 ரிங்கிட் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும் என்று Padiberas Nasional Bhd’s (Bernas) தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு RM2,350 இலிருந்து RM3,200 ஆக 36 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்த விலை உயர்வு 10 கிலோ அரிசி மூட்டைக்கு 7 ரிங்கிட் விலை உயர்வைக் காட்டுகிறது என்று பூமிபுத்ரா சில்லறை விற்பனையாளர்கள் அமைப்பின் தலைவர் டத்தோ அமீர் அலி மைடின் கூறினார்.
உதாரணமாக ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டால், அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுகிறார்கள், அதாவது ஒரு நாளைக்கு 10 தட்டுகள். ஒரு கிலோகிராம் அரிசி 10 தட்டுகளை சாதம் சமைக்க கிட்டத்தட்ட போதுமானது, அவ்வாறு நோக்கினால் அது ஒரு நாளைக்கு 70 காசு அதிகமாக செலவு செய்ய வேண்டும், எனவே ஒரு மாதத்திற்கு மொத்தம் RM21ஐ மேலதிகமாக ஒரு குடும்பம் செலவு செய்ய நேரிடும் என்றார் அவர்.
எனவே வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள B40 குடும்பங்களின் கஷ்டத்தைப் போக்க அரசாங்கம் இன்னும் பல உதவிகளை செய்ய வேண்டும் என்று அமீர் அலி கூறினார்.