ஈப்போ:
பேராக்-பகாங் மாநில எல்லைக்கு அருகே உள்ள ஆற்றில் நேற்று சனிக்கிழமை (செப். 30) மாலை 3.40 மணியளவில் ஓர் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக உடலை மீட்க முடியவில்லை என்றும், விமானம் மூலம் வெளியே கொண்டு வர வேண்டும் என்று, கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (அக் 1) காலை குறித்த உடலை மீட்க விமானப்படையின் ஹெலிகாப்டர் வரும் என்றும், அதன் பின்னர் அடையாளம் காணும் செயல்முறை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கேமரன் ஹைலேண்ட்ஸில் உள்ள சுல்தானா ஹாஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தகவல் தெரிந்தவர்கள் செயல்பாட்டு அறையை 05-491 5999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அஸ்ரி கேட்டுக் கொண்டார்.
மேலும் சரிபார்க்கப்படாத தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, 44 வயதான நந்தன் சுரேஷ் நட்கர்னி என்ற இந்திய சுற்றுலாப் பயணி , கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி குனுங் ஜாசர் என்ற இடத்தில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனார். அவரை தேடும் நடவடிக்கை (SAR) பகுதி பேராக் எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிய அஸ்ரி, நேற்று ஆறாவது நாளாகே தேடுதல் பணி நடைபெற்றதாகவும், அதில் பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த 101 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.