கோலாலம்பூர்:
கடந்த ஆகஸ்ட் மாதம் MYJalan App அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், குறித்த செயலி ஊடாக பொதுப்பணி அமைச்சு பெற்ற சாலை சேதம் பற்றிய புகார்கள் பத்து மடங்கு அதிகரித்துள்ளன என்று டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இது ஒரு நேர்மறையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் மக்களின் அக்கறை மற்றும் நாட்டின் சாலை உள்கட்டமைப்பு நல்ல மற்றும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முனைப்பான முயற்சிகளுக்கு இது ஒரு சான்றாகும் என்று பொதுப்பணி துறை அமைச்சருமான அவர் கூறினார்.
அக்டோபர் 2 முதல் அக்டோபர் 6 வரை செக் குடியரசின் ப்ராக் நகரில் நடைபெற்ற அனைத்துலக சாலை காங்கிரஸின் நிரந்தர சங்கம் (PIARC) ஏற்பாடு செய்த 27வது உலக சாலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் , சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான மலேசியாவின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
“இந்த MyJalan செயலியின் பயன்பாடு பொறுப்புணர்வை அதிகரிப்பதுடன் சாலை பயனர்கள், தொழில்துறையினர் மற்றும் அரசு நிறுவனங்களிடையே சாலைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் இன்று (அக் 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.