கோலாலம்பூர்:
வரும் நவம்பர் முதல் மார்ச் 2024 வரை நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மொத்தம் 24,283 மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
படகு கையாளும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி, நீர் மீட்புக் குழு பயிற்சி மற்றும் விரைவான நீர் மீட்புப் பயிற்சி ஆகியவை இந்த முன்னேற்பாடுகளில் அடங்கும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை இயக்குனர் டத்தோ அஹ்மத் இர்ஸாம் ஒஸ்மான் கூறினார்.
மேலும் “உயிர்காக்கும் அங்கிகள் (lifeboats) மற்றும் கடல் உபகரணங்கள் போன்ற அனைத்து சொத்துக்களும் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்.
“தொழிலாளர் விடுப்பு தேவைக்கேற்ப நிர்வகிக்கப்படும் என்றும் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து வேலை நேரம் 12 முதல் 24 மணிநேரமாக மாற்றப்படும் என்றும், பேரிடர் ஏற்பட்டால் போதுமான செயல்பாட்டு உறுப்பினர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்யப்படும் ” என்றார் அவர்.