ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலித்தீவில் அண்மைய நாட்களில் வறட்சி அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு அந்த நெருக்கடி நிலை நடப்பில் இருக்கும் என்று மாநில அரசாங்கம், கடந்த வியாழக்கிழமை (அக். 19) அறிவித்தது.
ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை பாலித்தீவில் நிலவிய அதீத வானிலையால் 113 கிராமங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்தோடு தலைநகர் டென்பசார் உள்ளிட்ட 10 வட்டாரங்களில் காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
தீயை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் மாநில அரசாங்கம் கூறியது.
தீச்சம்பவங்களை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அவற்றின் தாக்கம் பரவலாக உணரப்படும் என்று அஞ்சப்படுகிறது.