மலாக்கா:
மலாக்காவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை செய்யும் இடங்களில் தெருவைச் சுத்தம் செய்யும் பணியில் பேட்டரியில் இயங்கும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபா இன்று இங்குள்ள பண்டார் ஹிலிர் சுற்றுலாப் பகுதியில் அறிமுகமாகியது.
குறித்த ரோபோ தனது துப்புரவு பாதைகளில் சந்திக்கும் எந்த தடையையும் தவிர்க்கக்கூடியது என்று, இன்று சனிக்கிழமை (அக் 28)அந்த ரோபோவை அறிமுகம் செய்து வைத்தபின்னர் SWM Environment Sdn Bhd கார்ப்பரேட் விவகாரங்களின் பொது மேலாளர் முகமட் நோர்லிசம் முகமட் நோர்டின் கூறினார்.
மேலும் “இந்த ரோபோட் சுற்றுலாவை பயணிகளை கவர ஒரு அம்சமாகவும் இருக்கும் என்றும், இதனால் பண்டார் ஹிலிரில் உள்ள தெருக்களின் சுகாதார அளவை திறம்பட பராமரிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
இந்த ரோபோ ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கார் இல்லாத பகுதிகளில் முதலில் செயல்படும் என்றார்.
அத்தோடு “ரோபோ ஒரு ஆபரேட்டரால் நிர்வகிக்கப்படும் அல்லது ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் தானாகவே நிர்வகிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் ரோபோவின் பேட்டரி எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் அதே நேரத்தில் ரோபோவால் ஒரு நாளில் பெரிய அளவிலான குப்பைகளை அகற்ற முடியும் என்றும், இது மணிக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாகவும், ஒரு மணி நேர செயல்பாட்டில் பரந்த பகுதியை கடக்க முடியும் என்றும் முகமட் நார்லிசம் குறிப்பிட்டுள்ளார்.
ரோபோவில் அனைத்து வகையான குப்பைகளையும் உறிஞ்சி உள்ளெடுக்கும் வலிமையான உறிஞ்சும் சக்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.