நாசி கண்டார் என்றால் நம் நினைவுக்கு வருவது கோழி, ஆட்டிசிறைச்சி உள்ளிட்ட குழம்பின் கலவை தான். நாசி கண்டார் என்பது முஸ்லிம் சமூகத்தினரால் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது தற்பொழுது பெரும்பாலான மலேசியர்களின் விருப்ப உணவாக இருக்கிறது. நாசி கண்டார் ஹலால் உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்பொழுது வியாபாரி ஒருவர் பன்றி நாசி கண்டாரை தொடங்கி அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது நாசி கண்டார் என்ற பெயருக்கு இழுக்காக அமைந்து விடும் என்று மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கம் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் @ டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.
உணவினை பொறுத்த வரை அவரவர் கலாச்சாரம், பராம்பரியத்தை உள்ளடக்கியது. ஆனால் பன்றி இறைச்சியுடன் பரிமாற்றப்படும் உணவிற்கு நாசி கண்டார் என்ற பெயர் தான் தற்பொழுதைய பிரச்சினை என்றார் ஜவஹர் அலி. நாங்களும் ஒரு வியாபாரி தான். ஆனால் எங்களுடைய நீண்டகால பாரம்பரிய உணவான நாசி கண்டார் என்ற பெயர் பன்றி இறைச்சி உணவிற்கு பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று ஜவஹர் அலி கருத்துரைத்தார்.