சுபாங் ஜெயா:
சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த நபரை போலீஸ் கண்காணித்து வருகிறது.
குறித்த பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில், கருப்பு சட்டை மற்றும் சாம்பல் நிற ஷார்ட்ஸ் அணிந்த சந்தேக நபர், பார்க்கிங் கம்பத்தின் ஓரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, நீல மஸ்டா காரை நோக்கி நடந்து சென்ற சம்பவம் நவம்பர் 16 அன்று நடந்ததாக மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டது என்று, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
“இந்தச் சம்பவம் சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்தது என்றும், குறித்த வீடியோ பதிவில், கழிப்பறை இருப்பதாகக் கூறிய வீடியோ ரெக்கார்டருக்கும் சந்தேக நபருக்கும் இடையே உரையாடல் நடந்திருந்தது, சந்தேக நபர் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 14ன் படி இந்த வழக்கு ஒழுக்கக்கேடான நடத்தை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று வான் அஸ்லான் கூறினார்.
“சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக அவரை போலீசார் தேடுகின்றனர் என்றார்.
மேலும், வழக்கு தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் 03-78627100 (சுபாங் ஜெயா மாவட்டக் கட்டுப்பாட்டு மையம்) அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோரிஷாமுதீன் ஹம்தான் 010-2494819 என்ற எண்ணில் காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.