மோசடி செய்ததாக முன்னாள் அரசு ஊழியர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்:

கடந்த ஆண்டு உள்ளூர் அதிகாரசபையால் ஏலத்தில் விடப்பட்ட ஒரு பொருளைப் பெறுவதற்கு சாதகமாக RM2,300 லஞ்சம் கேட்டதாக 42 வயதான முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக நேற்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

செலாயாங் நகரசபையின் (M.P.S) முன்னாள் ஊழியரான முருகன் முனியாண்டி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூட் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொள்ளாது, விசாரணை கோரினார்.

M.P.S இடம் இருந்து ஏலம் விடப்பட்ட பொருளைப் பெறுவதற்காக ரிங்கிட் 2,300 லஞ்சமாக கொடுக்குமாறு கூறி, ஞானம் கோவிந்தசாமியை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

குறித்த குற்றச் செயலை கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி இங்குள்ள ஜாலான் செலாயாங் சேகர் 1, தாமான் செலாயாங் சேகர் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் அவர் செய்தார் எனக் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் மோசடி செய்ததற்காகவும், நேர்மையற்ற முறையில் சொத்துக்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி முகமட் அலிஃப் ஷஹாருஜாமான் வழக்கு தொடர்ந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு சார்பாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here