மூக்கில் நுழைந்து “மூளையை” உண்ணும் அமீபா.. 10 வயதே ஆன சிறுமி துடிதுடித்து உயிரிழப்பு

 மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. வெயில் காலத்தில் சில் செய்யப் பலரும் நீச்சல் குளங்களில் ஜாலியாக ஒரு குளியலைப் போடுவார்கள். பொதுவாக நம்ம ஊர்களில் ஏரி, குளங்களில் தான் குளியலைப் போடுவார்கள். சிலர் இதனால் எங்கே தங்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படுமோ என்றும் அஞ்சுவார்கள்.

அதுபோல அஞ்சும் நபர்கள் ஏரி, குளங்களைத் தவிர்த்துவிட்டு நீச்சல் குளங்களில் குளிப்பார்கள். ஆனால், இங்கே அதுவே ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது சிறுமி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்பவர் தான் இப்படி உயிரிழந்துள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி, பாலே நடனமும் பயின்று வருகிறாராம். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்ற போது, நீச்சல் குளத்தில் குளித்துள்ளார். இருப்பினும், சில நாட்களில் அவருக்குக் காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இது சில நாட்களில் சரியாகிவிடவே, சாதாரண அலர்ஜியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துள்ளனர். இருப்பினும், இரண்டு வாரங்களில் அவரது உடல்நிலை மோசமானதாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் படுக்கையில் இருந்தே எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

உயிரிழப்பு: மருத்துவமனையில் அட்மிட் ஆன மறுவாரமே தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். நல்ல உடல்நிலையில் இருந்த அந்த சிறுமி திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அந்த சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தான் அந்த சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்தை உறுதி செய்துள்ளனர்.

மூளையை உண்ணும் அமீபா: மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக இந்த நோய் தாக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 95% வாய்ப்பு இருக்கிறது. இதை பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என்று குறிப்பிடுவார்கள். நெக்லேரியா ஃபோலேரி என்ற அமீபாவால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்படும் குளங்கள் அல்லது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும். எனவே, இதுபோன்ற குளங்களில் குளிப்பதைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது.

விடுமுறைக்குச் சென்ற போது சான்டா மார்ட்டாவில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிய போது மூக்கின் வழியாக அந்த அமீபா சிறுமியின் உடலில் நுழைந்துள்ளது. இது குறித்து சிறுமியின் தயார் டாடியானா கோன்சாலஸ் கூறுகையில், “அவள் பல கனவுகளைக் கொண்டிருந்தார். அவருக்கு இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஸ்டெபானியா உடல்நிலை நன்றாகத் தான் இருந்தது. ஆனால் சில நாட்களில் அது முற்றிலுமாக தலைகீழாக மாறிவிட்டது.

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது, அந்த அமீபா மூக்கின் வழியாக உடலில் நுழைந்துள்ளது. அவருக்கு பல்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்க முயன்றோம். இருப்பினும், எதற்கும் பலன் இல்லை. எங்கள் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்பதை நாங்கள் பார்த்தோம். அதேபோல மற்ற குழந்தைகளுக்கு நடக்கக் கூடாது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here