பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் எம் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார்.
இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிகை சமந்தா நடிக்க தொடங்கினார். இதற்கிடையே கடந்தாண்டு மயோசிட்டிஸ் எனப்படும் தோல் அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர் ‘டிராலாலா’ என்ற என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் அந்த பதிவில், ‘எனது தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டிராலாலா மூவிங் பிக்ச்சர்ஸ், புதிய தலைமுறை மக்களின் வெளிப்பாடு மற்றும் சிந்தனையின் உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
நமது சமூக கட்டமைப்பின் வலிமை மற்றும் சிக்கலான தன்மையைப் பற்றி பேசும் கதைகளை உருவாக்கவும், திரைப்பட தயாரிப்பாளர்கள் அர்த்தமுள்ள, உண்மையான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல ஊக்குவிக்கவும் இந்த தளம் உதவும்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சிறுவயதில் கேட்டு ரசித்த ‘பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்’ என்ற ஆங்கில பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டு ‘டிராலாலா’ என்ற பெயரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.