மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுவர். ஆனால் நம் சமுதாயத்திற்கு மாற்றமே இருக்காது என்பது போல் தற்பொழுதைய அரசாங்கத்தின் செயல் இருப்பது வேதனையளிக்கிறது என்று பல இந்தியர்கள் கூறுவதை நம்மால் கேட்க முடிகிறது. காரணம் அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்தால் இந்தியர்களுக்கு விடிவுக்காலம் வரும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இன்றைய அமைச்சரவை மாற்றம்
அன்வார் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்த வேளையில் அமைச்சரவை மாற்றம் குறித்து பல ஆருடங்கள் இருந்தன. அந்த ஆருடங்கள் இன்று நிஜமானது. ஆனால் மாற்றம் நமக்கு (இந்தியர்களுக்கு) சாதகமாக இல்லை என்பதுதான் நிசர்தனமான உண்மை.
மனிதவளத்துறை அமைச்சராக இருந்த வ.சிவகுமாருக்கு பதிலாக ஸ்டீவன் சிம் நியமிக்கபட்டுள்ளார். அதே வேளை இலக்கவியல் துறைக்கு டத்தோ கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டத்தோ ரமணன், குலசேகரன் ஆகியோர் துணை அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியில் பதவி நிலைநிறுத்தபட்டிருக்கிறது. இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதா என்றால் அதற்கு பதில் ஏமாற்றம் என்றே கூற வேண்டும்.
முக்கிய அமைச்சர் பதவிகள்
அமைச்சர் பதவியில் எவர் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அனைத்து குடிமக்களுக்கும் சேவை வழங்குவார்கள் என்பது ஏற்று கொள்ளக் கூடியதுதான். ஆனால் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் சில குறிப்பிட்ட துறையில் இந்திய அமைச்சர்களின் நியமனம் ஏற்புடையதாக இருக்கும் என்பதே தற்பொழுதைய கருத்து. குறிப்பாக மனிதவளத்துறை அமைச்சராக இருந்த சிவகுமாருக்கு பதிலாக வேறொரு இந்திய அமைச்சருக்கு அந்த பதவியை வழங்கியிருந்தால் இந்திய சமூகத்தினருக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் மீது இன்னும் அதிக நம்பிக்கை இருந்திருக்கும்.